ஒரு தாயின் மகள் புராணம் இதோ!!
நிலா இல்லாத இரவுகளில் நீ சாப்பிட அடம்பிடிக்கையில்,
நிலாவுக்கு உடம்பு சரியில்லை,நாளைக்கு வந்துடும்
இப்போ நீ சாப்பிடு என நான் சொல்லி சாமாளிக்க...
அச்சச்சோ எனக்கு உடம்பு சரியில்லைனா
நீ ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போவ,
நிலாவை யாரும்மா கூப்பிட்டு போவா?
என நீ கேட்கும் கேள்விகளுக்கு விடை தெரியாமல்
விழிக்கையில் என் தாய்மை இன்னும் அழகாகிறதடி!!
******
என் கவலைகள் தீர்க்கும் உன் கன்னக்குழி சிரிப்பிற்கு
இன்னும் எத்தனை முறையானாலும்
பிரசவ'வலி'யை தாங்கலமடி என் செல்லமே!!
******
மகளாய் நீ பிறந்தபின்பு கோவிலுக்கு செல்வதை
வெகுவாய் குறைத்துவிட்டேன்...
வீட்டிலேயே தெய்வமாய் நீ இருக்க...
கோவில் சென்று நான் யாரை கும்பிட??
******
உன் அழகை பார்த்து யாரும் கண்வைத்து விடகூடாதென
கன்னத்தில் 'மை' வைத்தால் அது இன்னும்
உன்னை அழகாய் காட்டுகிறது என்ன செய்ய??
******
மறு ஜென்மத்திலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை..
அதனால்,என் செல்லமகளே
இப்போதே காட்டிவிடுகிறேன்..
உனக்கான அன்பு அத்தனையும் மொத்தமாய்!!
******
அம்மாவிடம் சண்டைபோட்டுவிட்டு
அப்பாவிடம் சரணடையும் வித்தையெல்லாம்...
யார் சொல்லி கொடுத்தாரடி உனக்கு??
******
பக்கத்து வீட்டு பிள்ளைகளிடம் நீ சிறுசண்டை போடுகையில்..
ஏண்டி இப்படி சண்டைகாரியா இருக்க என
நான் செல்லமாய் கோவிக்கையில்..
உன் மக உன்னை மாறித்தானே ம்மா இருப்பேன்..
என இடுப்பில் கைவைத்து,தலை சாய்த்து நீ சொல்கையில்..
ஒரே நிமிடத்தில் இந்த பிரபஞ்சமே
சொர்க்கமாய் மாறுகிறது என் செல்லமே!!
******
உன்மீதான என் எல்லா கோபங்களையும்..
'பசிக்கிதும்மா' என்ற ஒற்றை வார்த்தையில்
கரைத்துவிடும் கள்ளி நீ!!
******
உன்னால் நான் தெரிந்துகொண்டேன்..
தேவதைகள் வானில் பறப்பதில்லை!!
அவர்கள் மண்ணில் பிறக்கிறார்கள்
குழந்தை வடிவமாய் என!!!
******
இந்த காலத்தை விட பெரிய எதிரி எனக்கு வேறேதுமில்லை..
பின்னே குழந்தையாய் என் மடியில் தவழ்ந்த உனக்கு..
இன்று நீயொரு குழந்தையை சுமக்கும் வயதாகிறதே!!
******
போதுமடி மகளே,நீஎனக்கு கொடுத்த வரங்கள் யாவும்...
என் ஆசையெல்லாம் நான் இந்த உலகில்
கண் மூடுகையில் காணும் கடைசிமுகம்
உனதாய் இருக்கவேண்டும்..அதைவிட வேறென்ன
இருந்துவிட போகிறது,என் வாழ்க்கை முழுமைப்பெற?!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக